சிட்னி:
2 மாதங்கள் மிகக் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருந்த நாடு ஆஸ்திரேலியா.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, அந்நாட்டு மக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில் அங்கு டெல்டா கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியது.
வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவர் விடுதியில் 15 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு பணியாற்றிய ஊழியர் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டு, வைரஸ் பரவல் மீண்டும் தொடங்கியது.
ஆஸ்திரேலியா நாட்டின் பல முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இருந்தாலும்கூட அங்கு வைரஸ் பாதிப்பு குறைந்ததாகத் தெரியவில்லை. சிட்னி நகரில் 545 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
டெல்டா கொரோனாவால் இனி வரும் காலத்தில் தான் மோசமான பாதிப்பு ஏற்படும் என எச்சரித்துள்ள நியு சவுத் வேல்ஸ் ஆளுநர் கிளாடிஸ் பெரெஜிக்லியன், பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மந்தமாக நடைபெறும் வேக்சின் பணிகளே ஆஸ்திரேலியாவில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.
அங்கு வெறும் 25% மக்களுக்கு மட்டுமே முழுமையாக 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. இதுவே கொரோனா பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இத்துடன் டெல்டா கொரோனாவும் சேர்ந்துகொள்ள வைரஸ் பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
ஊரடங்கை எத்தனை காலம் அமல்படுத்தினாலும், அது கொரோனா பரவலைத் தள்ளிப்போட உதவுமே தவிர, முற்றிலுமாக தடுக்காது. வேக்சின்கள் மூலம் மட்டுமே நம்மால் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியும்.
எனவே, எளிதில் கொரோனாவால் பாதிக்கப்படும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து முதலில் வேக்சின் செலுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதனை உணர்ந்து ,
ஆஸ்திரேலியாவும் இப்போது வேக்சின் பணிகளில் முக்கியதத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளது. பைசர் வேக்சின்களை கொள்முதல் செய்யும் பணிகளிலும் அந்நாட்டு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
2 மாதங்களாக ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையிலும்கூட, சிட்னி நகரில் டெல்டா கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அந்நாட்டு அரசுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.