தமிழகத்தின் 15-வது ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தமிழக ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.
அவருக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து புதிய ஆளுநரின் பதவியேற்பு விழா கவர்னர் மாளிகையில் மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி புல்வெளி அரங்கில் நடைபெற்றது.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்றார்கள்.
முன்னதாக, புதிய ஆளுநரான ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் வரவேற்றனர். விமான நிலைய வளாகத்திலேயே ஆளுநருடன் முதல்வர் சிறிது நேரம் உரையாடினார்.