பிரசித்திபெற்ற திருவண்ணாமலை தீபத்திருவிழாவின்போது பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழா வருகிற 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று காலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெளியூர் பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்திட கோவில் இணையதளம் www.arunachaleswarartemple.tnhrce.in இணையவழி மூலம் வாக்காளர் எண், ஆதார் எண்ணை, வாகன ஓட்டுநர் உரிமம் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து தரிசனத்திற்கு வரும் போது அனுமதி சீட்டு எடுத்து வர வேண்டும். உள்ளூர் பக்தர்களுக்கு சிறப்பு சலுகை செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டு 3 ஆயிரம் பக்தர்கள் நேரடியாக அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம். கட்டுப்பாடுகள் விதித்த நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் இந்த அனுமதி சீட்டை பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலும், சிகர நிகழ்ச்சியான தீபத்திருவிழா வருகிற 19-ந்தேதி நடக்கிறது. வழக்கமாக 25 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் மகா தீபத்தன்று தரிசனம் செய்ய வருவார்கள்.
கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பக்தர்களின் நன்மைக்காக 17-ந்தேதி மதியம் 1 மணி முதல் 20-ந்தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்லவும் மற்றும் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்யவும் அனுமதியில்லை. மற்ற நாட்களில் கிரிவலம் செல்லலாம்.
இதேபோல், கோவில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் அன்னதானம் செய்ய அனுமதி கிடையாது என்று அவர் கூறினார்.