பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலாளர் கே.கோபால், போக்குவரத்துத் துறை ஆணையர் எஸ்.நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், “பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 2022 ஜனவரி 11 முதல் 13 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,000 சிறப்புப் பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 10,300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 6,468 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 2022 ஜனவரி 16 முதல் 18 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் 3,797 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,612 பேருந்துகளும் என ஆக மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படும்’ எனத்தெரிவித்தார்”.