‘பாவலரேறு’, ‘பெருஞ்சித்திரனார்’ என தமிழ் உணர்வாளர்களால் போற்றி மதிக்கப்படும் துரைமாணிக்கம் 10-03-1933 இல் பிறந்தவர்.
இவரது பெற்றோர் துரைசாமியார், குஞ்சம்மாள் ஆவர். இவரது சொந்த ஊர் சமுத்திரம் (சேலம் மாவட்டம்).
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் ‘இராசமாணிக்கம்’ என்பதாகும். பெருஞ்சித்திரனார் தம் தந்தையார் பெயரின் முன்னொட்டை இணைத்து ‘துரை-மாணிக்கம்’ என வைத்துக் கொண்டார்.
இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையானவர்.
‘தனித்தமிழ்த் தந்தை’ மறைமலையடிகள், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கைகள் அனைவரிடமும் பரவப் காரணமாக விளங்கியவர்.
தமிழீழ ஆதரவு:-
தமிழீழத் தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவர்.
தமிழரசன் போன்ற தமிழ்த் தலைவர்களுக்கு ஆதி காரணமாய் விளங்கியவரும் இவரே.
இவர் தடா,மிசா போன்ற இந்தியச் சட்டங்களின்கீழ் பல்வேறுமுறை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கிட்டத்தட்ட 20 முறைக்கும் மேலாக சிறைக்குச்சென்றவர். அவரது சிறைவாழ்வில் பல்வேறு எழுத்துப்பணிகளைச் செய்து வெளியிட்டார். ஐயை , திருக்குறள் மெய்ப்பொருளுரை ஆகியவை புகழ்பெற்ற ஆக்கங்களாகும்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழீழப் போராட்டம் வரை இவரது செயல்பாடுகள் தமிழர்கள் நடுவில் வியந்து போற்றப்படுகின்றன. தமிழ்த் தேசியத் தந்தையாக இன்று தமிழர்களால் போற்றப்படுகிறார்.
இதோ ஒருவன் நான் இங்கிருக்கின்றேன்
எனைச்சிறை செய்யினும் செய்க!
ஈழத்தமிழரை ஆதரிக்கின்றேன்
என் தலை கொய்யினும் கொய்க.
-என்ற இவரின் வரிகள் போற்றதக்கதாகும்.
தனித்தமிழ் நாடு:-
தமிழ்நாடு இந்திய அரச கட்டமைப்பிலிருந்து விடுபட்டு தனித்தமிழ்நாடு என்ற தனித்தேசமாக வேண்டும் என்பது இவரது அரசியல் நிலைப்பாடு. அவர் தனது ‘தென்மொழி’ இதழின் முதல் இதழிலிருந்து இதனை வலியுறுத்திவந்தார்.
மத கொள்கை:-
தமிழ்மரபில் சிவனிய (சைவ), மாலிய(வைணவ) சமய நெறிப்பட்ட தனித்தமிழ் அறிஞர்களின் மரபுகளிலிருந்து வேறுபட்டு மதம்சாரா (secular) தனித்தமிழ் அறிஞராக இருந்தார் என்பது இவரது தனித்தன்மையாகும்.
இவரது தனித்தமிழ்க்கொள்கை மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்களையே பெரும்பாலும் அடியொற்றி அமைந்துள்ளது.
ஜாதிய எதிர்ப்பு:-
பெருஞ்சித்திரனார் சாதியை வெறுத்து இறுதிவரை வாழ்ந்தார். அவரது சாதி எதிர்ப்புக் கருத்தியல் தமிழர்களின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் எளிய, அடித்தட்டு சாதியினரின்பால் மிகுந்த கரிசனம் கொண்டதாகவும் விளங்கியது.
எம்மதங்களைத் தழுவினாலும் தமிழர் இனத்தால் தமிழரே என்பதை இவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். சாதியை வைத்துத் தமிழர்கள் தங்களை அடையாளப்படுத்தும் போக்கை இவர் தொடர்ந்து கண்டித்து எழுதி வந்தார்.
சாதியை ஒழிப்பது குறித்து தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்த பெருஞ்சித்திரனார் அந்தக் கருத்தியலைக் கொண்டிருந்தவர்களோடு இணக்கமான உறவையும் கொண்டிருந்தார்.