பெங்களூரு:-
கன்னட நடிகர் சுதீப்புக்கு நேற்று 50வது பிறந்த நாள். இதனை கொண்டாட எருமை மாட்டை வெட்டி பலி கொடுத்த ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சுதீப் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.இவர் பின்னணிப் பாடகராகவும், கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் இருந்தவர்.
இதுதவிர தனது அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். நடிப்பதோடு நிறுத்தி விடாமல், இதுபோன்ற சமூக சேவைகளில் ஈடுபடுவதனால் அவர் ரசிகர்கள் மனதில் அளவுக்கதிகமான அன்பை பெற்றவர்.
இந்நிலையில், நடிகர் சுதீப் தனது 50-வது பிறந்த நாளை நேற்று முன்தினம் கொண்டாடினார்.இதை சிறப்பாக கொண்டாட கர்நாடகா பல்லாரி மாவட்டம், சண்டூர் கிராமத்தை சேர்ந்த அவரது ரசிகர்கள், எருமை மாடு ஒன்றை வீச்சரிவாள் மூலம் பலி கொடுத்தனர்.
அப்போது, சில ரசிகர்கள் அதன் ரத்தத்தை சுதீப் கட் அவுட்டின் மீது கொட்டி ரத்தபிஷேகம் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 25 ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.