மதுரை :
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்.
முரட்டு மீசையுடன் கம்பீரக்குரலோடு சினிமாவில் முகம் காட்டிய நடிகர் தவசி. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் சூரியுடன் இணைந்து குறி சொல்லும் கோடங்கியாக கலகலப்பூட்டியவர் நடிகர் தவசி.
அந்த படத்தில் அவர் பேசிய “கருப்பன் குசும்புக்காரன்” என்ற டயலாக் பிரபலம்.அதே போல “ரஜினி முருகன்” படத்திலும் பஞ்சாயத்து செய்யும் பெரியவராக நடித்திருப்பார். அழகர் சாமியின் குதிரை படத்தில் உள்ளூர் கோடாங்கியாகவும் நடித்து அனைவரையும் மகிழ்வித்தார்.
முன்னதாக ராசாத்தி என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்த போது விபத்தில் சிக்கிய தவசி, தொடர்ந்து ஊரடங்கால் படப்பிடிப்பின்றி முடங்கினார். இடையில் புற்று நோய் தீவிரம் அடைந்ததால் தவசியின் உடல் நிலை பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து மீசையின்றி பரிதாபமாக காட்சி அளித்தார்.
மதுரை நரிமேட்டில் உள்ள திமுக MLA சரவணனின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சூரி, சிவகார்த்திகேயன், சிம்பு, விஜய் சேதுபதி, ரோபோ சங்கர் உள்ளிட்ட நடிகர்கள் தவசிக்கு நிதியுதவி செய்தனர்.இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.