வாஷிங்டன் :
அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பிடன் தனது அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களில் ஒரு சிலரின் பெயர்களை இன்று வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிந்து 20 நாட்களுக்கு மேலாகியும் ஜோ பிடனின் வெற்றியை ஏற்க குடியரசு கட்சியைச் சேர்ந்த அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் முடிவுகள் குறித்து அவர் பல்வேறு வழக்குகளையும் தொடர்ந்துள்ளார். இந்நிலையில் ஜி.எஸ்.ஏ. எனப்படும் பொது சேவை நிர்வாகம் புதிய அதிபராக ஜோ பிடன் வென்றதாக அறிவிக்க வேண்டும். அதன்பிறகே நிர்வாக மாற்றத்துக்கான நடவடிக்கைகள் துவங்கும். ஆனால் பொது சேவை நிர்வாகம் இதுவரை அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.
இதற்கிடையே தன் அமைச்சரவையில் இடம்பெறக் கூடியவர்களை ஏற்கனவே தீர்மானித்து விட்டதாக பிடன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.வரும் ஜனவரி-20ல் அவர் அதிபராக பதவியேற்க உள்ளார். அதற்கு முன்னதாக அமைச்சர்களின் பெயர்களை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. முதல்கட்டமாக தன் அமைச்சரவையில் இடம்பெறக் கூடிய சிலரின் பெயர்களை பிடன் இன்று அறிவிப்பார் என பரவலாக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் அல்லது வருவாய் துறை அமைச்சரின் பெயர்களை அவர் வெளியிடலாம்.ராணுவத் துறைக்கு முதல் முறையாக ஒரு பெண் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.அதுபோலவே வருவாய் துறை அல்லது ‘வெட்ரன்ஸ்’ எனப்படும் முன்னாள் ராணுவத்தினர் விவகாரத் துறைக்கும் பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்படலாம்.
ஜோ பிடனின் மற்றொரு முக்கிய ஆலோசகரான ஜேக் சுலைவான் தேசிய பாதுகாப்பு ஆலோசகராகும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.