தமிழில் அரண், காசி, பீமா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த சனுஷா, ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியானார்.
தொடர்ந்து நாளை நமதே, எத்தன், நந்தி, அலெக்ஸ் பாண்டியன், கொடிவீரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். அவர் தற்போது வீடியோ ஒன்றினை வெளியிட்டு அதில் “கொரோனாவின் ஆரம்ப காலம் எனக்கு பெரிய அளவில் கஷ்டத்தை கொடுத்தது. சொந்த வாழ்க்கையிலும், தொழில் ரீதியாகவும் சங்கடங்கள் ஏற்பட்டன. எண்ணங்கள் என்னை பயமுறுத்தின. இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது.
பிரச்சினைகளை யாருடன் பகிர்ந்து கொள்வது என்றும் தெரியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்தேன். அப்போது மிகவும் பாசம் வைத்துள்ள எனது தம்பியை பற்றி யோசித்தேன்.நான் இறந்துபோனால் அவனால் தாங்கி கொள்ள முடியாது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சியை கைவிட்டேன்.
பிறகு டாக்டரை சந்தித்து சிகிச்சை எடுத்தேன். அதன் பிறகு எனது மனதில் இருந்து சுமைகள் விலகி பழைய நிலைக்கு மாறினேன். என்னைப்போல் யாருக்கேனும் மன அழுத்தம் இருந்தால் அவர்கள் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதனை சொல்கிறேன்” என்று கூறினார்.