கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியிருந்த படம் ‘த்ரிஷ்யம்’. பின்னர் இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. அதனையடுத்து இந்த படத்தின் மலையாள வெற்றியை தொடர்ந்தது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் தமிழில் ரிமேக் செய்யப்பட்டு இங்கேயும் நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியது. அதனையடுத்து இந்த படத்தை சினமா ரசிகர்களும் விமர்சகர்களும் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்தப்படம் முதல் பாகத்தை விட கூடுதல் சிறப்பாக உள்ளது என விமர்சகர்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் நடிகர் மோகன்லால் தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் இதுகுறித்து ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அதில், “‘த்ரிஷ்யம் 2’ படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. படம் பார்த்த அனைவரும் மெசேஜ் மற்றும் கால்களின் மூலமாக பாராட்டுவது நெகிழ்ச்சியடைய வைக்கிறது. நல்ல படத்தை உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கள் எப்போதும் பாராட்டி ஆதரிப்பார்கள் என்பதற்கு ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் வெற்றி மிகப்பெரிய சான்று. சினிமாவை விரும்பும் மக்கள் தொடர்ந்து தரும் அன்பும் ஆதரவுமே நாங்கள் எங்களை மேம்படுத்திக்கொள்ள ஊக்கமளிக்கிறது. உங்கள் அனைவரது அன்புக்கும் நன்றிகள். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.