நடிகர் ரஜினிகாந்தின் மக்கள் மன்றத்தை மையப்படுத்தி டுவிட்டரில் #2YrsOfRajiniMakkalMandram என்ற hastag ட்ரெண்டாகி வருகிறது.
பல ஆண்டுகளாக ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் தமிழகத்திலும் நிலவிவந்த ஒரு கேள்வி ரஜினி எப்போது அரசியலுக்கு வருவார் என்பதுதான். அதன்படி கடந்த 2017 ஆம் ஆண்டு தனது ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் ரசிகர்களிடையே பேசிய ரஜினி, எனது அரசியல் நிலைப்பாடு குறித்து அறிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருக்கிறீர்கள் என்றும், அது குறித்த முடிவை டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்கப்படும் தெரிவித்தார். அதன்படி டிசம்பர் 31-ஆம் தேதி தான் அரசியலுக்கு வரப் போவதாகவும், 2021 சட்டமன்றதேர்தல் தனது இலக்கு என்றும் அறிவித்திருந்தார்.
அதுவரை இருந்த அவரது ரஜினி ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக மாற்றப்பட்டு புதிய கட்சிக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகளை தொடங்கினார். அதன்படி ரஜினி மக்கள் மன்றம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களிடையே பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறது. ஆனால் ரஜினியும் கட்சி எப்போது தொடங்குவார் என்று அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. மேலும் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் கட்சி தொடங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் டுவிட்டரில் அவரது ரசிகர் மன்றம் ரஜினி மக்கள் மன்றம் ஆக மாற்றப்பட்டதை கொண்டாடும் வகையில் 2YrsOfRajiniMakkalMandram என்ற hastag டிரெண்ட் ஆகி வருகிறது.