கோழிக்கோடு:-
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் இரன்கிபலன் என்ற பகுதியை சேர்ந்தவர்கள் பிரேம் சந்திரன்(26) மற்றும் சந்திரா சந்தோஷ் (23).
சிறு வயது முதலே இருவரும் பழகி வந்த இவர்கள், இளம் வயதில் காதலர்கள் ஆனார்கள். தங்களது காதல் குறித்து இரு வீட்டிலும் தெரியப்படுத்த அவர்கள் பெற்றோரும் காதலுக்கு பச்சை கொடி காட்டினார்கள்.
கடந்த 2018ம் ஆண்டு மே 20ந்தேதி இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மே மாதத்தில் கேரளாவில் நிபா வைரஸ் பரவியது.
கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியது. 17 பேர் வரை பலியாகினர். நிபா வைரஸ் பாதிப்பு குறைந்தபின் திருமணம் நடத்தி விடலாம் என நினைத்தனர்.
ஆனால், மணமகனின் நெருங்கிய உறவினர் ஒருவர் மரணம் அடைந்ததால் திருமணம் ஒரு வருடத்திற்கு தள்ளி போனது.
பின்னர் கடந்த 2019ம் ஆண்டு ஓணம் பண்டிகை விடுமுறையையொட்டி திருமணம் முடிவானது. ஆனால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் பெருவெள்ளம் புகுந்து விளையாடியது.
இதனால் 2வது முறையாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. மூன்றாவது முறையாக இந்த வருடம் மார்ச்சில் (மார்ச் 20)திருமணம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டு 2 ஆயிரம் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுக்கப்பட்டது.
ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் வில்லனாக வந்து நின்றது. கேரளாவில் 40க்கும் மேற்பட்டோருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 3 பேர் சிகிச்சை முடிந்து திரும்பியுள்ளனர்.
இதனால் மக்கள் ஒன்றாக கூடுவதற்கு அரசு தடை விதித்தது. இதனை தொடர்ந்து 3வது முறையாக திருமணம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தற்போது இவர்களது திருமணம் வரும் செப்டம்பரில் நடைபெற உள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்து உள்ளனர். இம்முறை இவர்களது திருமணம் நடைபெற வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.