புதுடில்லி :
சேவை அல்லது பொருளை அல்லது கடனை வழங்கும் நிறுவனங்கள், குறிப்பிட்ட தேதியில், நம் வங்கி கணக்கிலிருந்து தொகையை அதுவாகவே எடுத்துக் கொள்ளும் நிலை தற்போது இருந்து வருகிறது.
ஆனால், இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல் பணம் எடுக்க முடியாது. பணம் எடுக்க வேண்டுமானால் 24 மணி நேரத்துக்கு முன்பாகவே பணம் எடுக்க உள்ளது குறித்து வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
வங்கி கணக்கு வாயிலாக, மாதாந்திர பில்கள் மற்றும் தவணை தொகைகளை, ‘ஆட்டோ டெபிட்’ முறையில் செலுத்துவதில் ரிசர்வ் வங்கி மாற்றங்கள் செய்துள்ளது. புதிய நடைமுறை அக்டோபர் 1 தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நடைமுறைபடி வாடிக்கையாளர்கள் அனுமதி வழங்கினால் தான் இனிமேல் வங்கிகள் பணத்தை எடுக்க முடியும். குறிப்பாக ரூபாய் 5,000 மேற்பட்ட தொகை எனில் ஒரு முறை வழங்கப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் (கடவு எண்) வாயிலாக வாடிக்கையாளரின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் வங்கிகள் பணத்தை எடுக்க முடியும்.
ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய நடைமுறை நாளை (01.10.2021) முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.