தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு திடீரென ஆய்வு நடத்தினார்.
சேலம், தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். முதல்வர் நேற்று சேலம் மாவட்டத்தில் தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார். அதன் பின்னர் அவர் தருமபுரி மாவட்டத்திற்கு புறப்பட்டு சென்றார்.
அப்போது அதியமான் கோட்டையில் கூடியிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். பிறகு அவர் அதியமான் கோட்டை காவல்நிலையத்திற்கு சென்றார். அங்கு 1998-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்ட கல்வெட்டினை பார்வையிட்டார். காவல் நிலையத்திற்குள் சென்று, உதவி ஆய்வாளரின் இருக்கையில் அமர்ந்து ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்திற்கு வந்த புகார்கள் குறித்தும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார். சுமார் 10 நிமிடங்களுக்கு பின் அவர் காவல் நிலையத்திலிருந்து கிளம்பி சென்றார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. சா.கற்பகவிக்னேஷ்வரன்