இந்தூர்:-
சீனப் பொருள்களை நாட்டு மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் செளஹான் கோரிக்கை விடுத்துள்ளார். லடாக்கின் கிழக்கு பகுதியிலுள்ள கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் அண்மையில் சீன படையினருடனான கைகலப்பில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். சீன தரப்பில் 43 வரை பலியானதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்க அந்நாட்டு பொருள்களை புறக்கணிக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ரெவாவில் (Rewa) செய்தியாளர்களிடம் பேசிய சிவ்ராஜ் சிங் செளஹான், எல்லையில் சீனப்படையினருக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்ததாகவும், இதேபோல் சீன பொருளாதார வலிமையை உடைத்தெறிய, அந்நாட்டு பொருள்களை புறக்கணித்து இந்திய பொருள்களை மக்கள் பயன்படுத்த வேண்டுமென வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.
இதேபோல, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் சீன பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முன்னதாக அனைத்து இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation of All India Traders (CAIT)) 450 சீன பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.