பரேலி:-
உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் (Bareilly) உள்ள ஆலா ஹஸ்ரத் தர்கா (Dargah Aala Hazrat) ஆல்கஹால் அடிப்படையிலான சனிடைசர்களை (Alcohol Based Sanitizers) பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் ஏனெனில் இஸ்லாத்தில் ஆல்கஹால் தடைசெய்யப்பட்டது என்றும், இதை பயன்படுத்துவதனால் மசூதியின் புனிதத் தன்மையை கெட்டுவிடும் என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து ஆலா ஹஸ்ரத் தர்காவின் மதகுரு முஃப்டி நஷ்தர் ஃபருக்கி (Mufti Nashtar Farooki):-
ஆல்கஹால் கலந்த ஆல்கஹால் மூலம் தயாரிக்கப்பட்ட கிருமிநாசினிகள் பயன்படுத்துவதை இஸ்லாமியர்கள் அனைவரும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இஸ்லாத்தில் ஆல்கஹால் தடை செய்யப்பட்ட ஒன்று. இதை மசூதி மற்றும் தர்காக்களில் தெளித்து கடவுளின் இல்லத்தை நாம் அசுத்தப்படுத்த கூடாது.
மேலும், இதுபோன்ற அசுத்தமான இடங்களில் தொழுகை நடத்தவும் கூடாது. ஆல்கஹால் கலந்த அல்லது ஆல்கஹால் மூலம் தயாரிக்கப்பட்ட கிருமிநாசினி மசூதிகள் மற்றும் தர்காக்களில் தெளிப்பதன் மூலம் நாம் தெரிந்தே பாவத்தை செய்கிறோம். எனவே இதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதுகுறித்து மற்ற மசூதிகளின் இமாம்களுக்கும் தகவல் அனுப்பி உள்ளேன் என்று கூறினார்.
மேலும், கூறிய முஃப்டி ஆல்கஹால் அடிப்படையிலான கிருமிநாசினிகள் பயன்படுத்துவதற்கு பதில் ஷாம்பு, சோப்புகள், டிடர்ஜென்ட் பவுடர் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்றும் யோசனை கூறியுள்ளார்.
முன்னதாக மதுராவில் உள்ள ஸ்ரீ ரங்கநாத் ஜி கோயிலை சேர்ந்தவர்களும் ஆல்கஹால் கலந்த கிருமி நாசினிகளை கோவிலில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.