டெல்லி:-
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் 6 முக்கிய பொருட்களை மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் நமக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. பொதுவாகவே நாம் நமது ஆரோக்கியத்தில் அதிக கவனம் கொண்டிருக்க வேண்டும். நாம் ஆரோக்கியமுடனுன், உற்சாகமுடனும் இருந்தால்தான் நம்மை சுற்றி நேர்மறையான எண்ணங்களை உருவாக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு நீங்கள் மருந்துகளை எடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதற்கு பதிலாக சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டாலே போதும்.
வைட்டமின் சி நிறைந்த உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கூறியுள்ளது. அதோடு சில உணவுகளையும் பரிந்துரைத்துள்ளது.
அவை நெல்லிகாய், ஆரஞ்சு, பப்பாளி, குடைமிளகாய், கொய்யாப்பழம், எலுமிச்சை ஆகிய ஆறும் ஆகியவை இந்த பட்டியலில் அடங்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் தோல் பாதுகாப்பு உள்ளிட்ட மேலும் சில மருத்துவ பண்புகளும் இதில் அடங்கியுள்ளன. அவற்றை இங்கு காண்போம்..
நெல்லி:-
ரத்தத்தை சுத்திகரிப்பதற்கும், ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கும் நெல்லி பயன்படுவதாக ஆய்வுகள் கூறகின்றன. மேலும் இதில் உள்ள வைட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். நெல்லிக்காய் கேச ஆரோக்கியத்துக்கும் கண்களுக்கு மிகவும் நல்லது. தவிர, நெல்லிக்காய் சாறு வயிற்றை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.
அதனால் இதனை கண்டிப்பாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆரஞ்சு:-
சோர்வாக இருப்பவர்களுக்கு கூட ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்த ஆரஞ்சு உதவும். அதனால்தான் நோயாளிகளை பார்க்க செல்கையில் ஆரஞ்சு பழங்களை கையோடு வாங்கி செல்கிறார்கள்.
மேலும் நிறைய பேர் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆரஞ்சும் ஒன்று. இதில் வைட்டமின் சி மட்டுமல்லாமல் நார்ச்சத்து, வைட்டமின்கள், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும் நிறைந்துள்ளன. அதனால் இதன் சுவையை ரசித்துக் கொண்டே உடல்நலத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். ஆரஞ்சு பழச்சாறு ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்கும்.
பப்பாளி:-
இதில் அதிக அளவில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பப்பாளி பழத்தில் கலோரியும் குறைவாகவே காணப்படுகிறது. குடல் இயக்கத்திற்கு பப்பாளி உங்களுக்கு உதவும். அதே போல் வயிறு சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து விடுபடவும் பப்பாளியை எடுத்துக் கொள்ளுங்கள்.
அதுமட்டுமல்லாது பப்பாளி கண்கள் மற்றும் தோல் ஆகிய இரண்டிற்கும் மிக முக்கியமான பயனளிக்கக்கூடிய பழமாகும்.
குடை மிளகாய் (Capsicum):-
இதில் ஆன்டி-ஆக்ஸிடெண்டுகள் நிறைந்துள்ளன. அது மட்டுமல்லாமல் வைட்டமின் சி-ம் நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின்கள் E மற்றும் A, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் காணப்படுகின்றன. கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், ரத்த சோகை ஏற்படாமல் தடுப்பதற்கும் கேப்சிகம் நல்லது.
நார்ச்சத்து பொட்டாசியம் மற்றும் மினரல்கள் குடைமிளகாயில் நிறைந்துள்ளது.
கொய்யா:-
வாழைப்பழம் போன்று மிக எளிதாக கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா.
இப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதோடு ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். இதயம் சம்பந்தமான நோய்கள், தசைபிடிப்பு பிரச்னைகளை சரிசெய்ய இந்த பழத்தை சாப்பிடுங்கள். குறிப்பாக மாதவிடாய் வலி ஏற்படாமல் தடுக்க கொய்யாப்பழம் நல்ல பலன்களை தரும்.
எலுமிச்சை:-
மிக சாதாரணமாக குறைந்த விலையில் கிடைக்கும் இந்தப் பழம் உங்கள் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும். உடலில் நீர் வற்றிப்போவதை தடுக்கும். எடை குறைப்பதற்கும் இது உதவுகிறது. செரிமான பிரச்னைகளில் இருந்து விடுபட எலுமிச்சை பயன்படுகிறது. சிறுநீர் அளவை அதிகரிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவுகிறது.