ஆந்திரா:
ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரு என்ற நகரின் பல இடங்களில் வசித்த 270 பேர் கடந்த 2 நாட்களில் மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல், கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல எனவும், பொதுவான எந்தவொரு நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை எனவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பும் பாதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 100-க்கும் அதிகமானோர் வீடு திரும்பிய நிலையில்,மிஞ்சியிருந்தவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.சிகிச்சை பெறுபவர்களில் 6 பேருக்கு மேல் சிகிச்சைக்காக விஜயவாடாவில் இருக்கும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதனால் மருத்து நிபுணர் குழுவினர் எலுருவில் முகாமிட்டுள்ளனர். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.அதில் எந்த பிரச்சினையும் கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எலுரு பகுதியில் குடிநீரில் ரசாயன வேதிப்பொருள் நிறைந்த மாசுபட்ட நீர் கலந்திருக்கலாம் எனவும் அதனை குடித்ததால் தான் மக்களுக்கு இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால், இந்த விவகாரம் குறித்து மருத்துவக் குழுவினர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.