லக்னோ:
உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது சொந்த நிலத்தை மோடிக்கு எழுதி தருவதாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசத்தில் வசிக்கும் மூதாட்டியான பிட்டன் தேவி(85), அந்தப் பகுதியில் உள்ள வக்கீல் ஒருவரை சந்தித்து, தனது பெயரில் இருக்கும் நிலத்தை பிரதமர் மோடி பெயருக்கு மாற்ற வேண்டும் எனக் கோரியுள்ளார். அதிர்ச்சியடைந்த வக்கீல் அவரிடம் விசாரித்ததில்,”தனது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாகவும், அதன்பிறகு தனது மகன்கள் தன்னை கவனித்துக் கொள்ளவில்லை எனவும் மூதாட்டி கூறியுள்ளார். அரசு வழங்கும் ஓய்வூதியத் தொகையை பயன்படுத்தி தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்து வருவதாகவும்” கூறினார்.
மேலும், பிரதமர் மோடி அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து வருவதாக பாராட்டிய மூதாட்டி, அதனால் தனக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை மோடி பெயருக்கு மாற்ற முடிவெடுத்துள்ளதாக வக்கீலிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.மகன்கள் கைவிட்டும், அரசு வழங்கும் பணத்தை கொண்டு தேவைகளை பூர்த்தி செய்துவரும் இந்த மூதாட்டி, மகன்களுக்கு சொத்தில் பங்கு தருவதில் உடன்பாடு இல்லை எனவும் கூறியுள்ளார்.