மருத்துவக் கலந்தாய்வின்போது மாணவர்கள் தேர்வுக்குழுவிடம் ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்திட வேண்டும் என்ற புதிய நடைமுறையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் யு.ஜி தேர்வு நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,050 இடங்களில் அகில இந்திய ஒதுக்கீடுக்கு 757 இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், எஞ்சிய 4,293 இடங்களுக்கும், இதர தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வை நடத்துவதற்கான அறிவிப்பாணை ஓரிரு நாளில் வெளியாகும்.
இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் மருத்துவக் கலந்தாய்வுக்கான புதிய நடைமுறையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவக் கலந்தாய்வின்போது இடங்கள் ஒதுக்கப்பட்ட பின் மாணவர்கள் தேர்வுக்குழுவிடமே ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்திட வேண்டும் எனவும் இதன்மூலம் கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லும்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதோ, சேர்க்கையை மறுப்பதோ முற்றிலும் தடுக்கப்படும் எனவும் மாணவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை சம்மந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தேர்வுக் குழுவே பின்னர் விடுவிக்கும் எனவும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.