புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வார்டு ஒதுக்கீட்டை மறு ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் தற்போதைக்கு தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் இனத்தவருக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாகக் கூறி முத்தியால்பேட்டை தொகுதி சுயேட்சை எம்எல்ஏ பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, உள்ளாட்சித் தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக சட்டத்தை மீறி செயல்பட முடியாது என்று கூறி, இதுதொடர்பாக புதுச்சேரி அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது புதுச்சேரி அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெரனல் ஆர்.சங்கரநாராயணன் ஆஜராகி,
முறையாக வார்டுகளை மறுவரையறை செய்து, வார்டு ஒதுக்கீட்டை மறுஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரியில் தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் வாய்ப்பு இல்லை.
இதனால் அக்.21 முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கை தள்ளி வைக்க வேண்டும் எனக் கோரினார்.