இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை வரும் அக்டோபர் மாதத்தில் உச்சம் பெறலாம் என்று மத்திய அரசின் நிபுணர்கள் குழு எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டு அலை தாக்கத்தால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மூன்றாம் அலை தாக்கும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய சூழலில் அனைத்து மாநிலங்களும் கொரோனா மூன்றாவது அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் நிபுணர்கள் கொண்ட குழு, அறிவுறுத்தியுள்ளது. முக்கியமாக குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்திடுவதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் சிறிது சிறிதாக அதிகமாகி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள நிபுணர் குழு, கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் பாதியளவேனும் மூன்றாம் அலையில் இருக்கக் கூடும் என்று கணித்துள்ளது.
எனவே தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தவும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை தீவிரமாக பின்பற்றிடவும் வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜனை இருப்பு வைக்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளது.