சென்னை:-
ஏடிஎம் மெஷின்களில் வாடிக்கையாளர்கள் 5,000 ரூபாய்க்கு மேல் எடுத்தால் கட்டணம் வசூலிக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வங்கிக் கணக்கில் இருந்து ஒருவர் 5,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் வங்கிகள் கட்டணம் வசூலிக்கலாம் என மத்திய ரிசர்வ் வங்கியின் ஏடிஎம் பிரிவு பேனல் ஒன்று பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் முன்னாள் தலைமைச் செயலதிகாரியான
வி.ஜி. கண்ணன் தலைமையில் இந்த ஏடிஎம் பேனல் 2019 ஜூன் மாதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேனல் அக்டோபர் 22ஆம் தேதியே தனது பரிந்துரையை ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்திருக்கிறது. அதில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், இந்தியாவில் 66 சதவீத ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகள் 5,000 ரூபாய்க்குக் கீழ்தான் நடந்துள்ளது. எனவே 5,000 ரூபாய்க்கு மேல் எடுக்கப்படும் பணத்துக்குக் கட்டணம் வசூலிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது வங்கிகள் கொடுக்கும் இலவச ஏடிஎம் பரிவர்த்தனை எண்ணிக்கை வரம்புக்கு மேல் வசூலிக்கப்படும் கட்டணத்தைத் தற்போதுள்ள 20 ரூபாயிலிருந்து 24 ரூபாயாக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக, வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கியின் ஏடிஎம் பேனல் பரிந்துரை செய்துள்ளது.
ஸ்ரீகாந்த் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் கீழ் இத்தகவல்கள் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அதைத்து பணபரிவர்த்தனைகளும் வங்கி மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. சேவைக் கட்டணம் என்ற பெயரில் குறிப்பிட்ட அளவுத் தொகை அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஏடிஎம் பணப் பரிமாற்றங்களுக்கு கட்டணம் வசூலிப்பது, ஏடிஎம் கார்டுகளுக்கு தனியாக கட்டணம் வசூலிப்பது, குறைந்தபட்ச இருப்புத் தொகையை வைத்திருக்கவில்லை என்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அபராதமாகப் பிடித்தம் செய்வது, வங்கி தொடர்பான எஸ்எம்எஸ் சேவைக்கு கட்டணம் வசூலிப்பது என வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கிகள் பணத்தை வசூலித்துக் கொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.