தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு மிக மோசமாக இருக்கும் சூழலில், எதற்காக பள்ளிகளைத் திறந்தீர்கள் என டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்றைய தினம் வழக்கு விசாரணை தொடங்கியபோது, டெல்லியில் பள்ளிகள் திறக்கப்பட்டதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
நீதிபதிகள் கூறியதாவது,
டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருக்கும் சூழலில் எதற்காக பள்ளிகளை திறந்தீர்கள். வேலை செய்பவர்கள் வீட்டில் இருந்து செயல்படும் போது எதற்காக குழந்தைகள் மட்டும் ஏன் பள்ளிக்கு வர கட்டாயப் படுத்துகிறீர்கள் என டெல்லி அரசுக்கு நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்.
மேலும் காற்று மாசுபாட்டை குறைப்பது சம்பந்தமாக பக்கம் பக்கமாக பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்யும் மத்திய அரசும், டெல்லி அரசும் நடைமுறையில் எதனையும் செய்யவில்லை எனவும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.