புதுச்சேரியில் வரும் 6ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் கூறுகையில்,
புதுச்சேரியில், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகள் வரும் 6ம் தேதி முதல் திறக்கப்படுகிறது.
அதேசமயம் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும். ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் அரைநாட்கள் இயங்கி வரும் வகுப்புகள் வரும் 6ம் தேதி முதல் முழுநேரம் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.