மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு மேல் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே 11 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து பேச்ச வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.
அதனையடுத்து குடியரசு தினத்தன்று நடந்த ட்ராக்டர் பேரணியில் விவசாயிகளும் போலீசார்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.மேலும் பலர் காயமடைந்தனர். அத்தனையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு உள்ளூர் தலைவர்கள் முதல் உலக தலைவர்கள் வரை ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவர்களில் சிலர் விவசாயிகள் போராட்டத்தில் மனித உரிமைகள் மீறப்படுவதாகக் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து, ஐநா மனித உரிமைகள் ஆணையம் விவசாயிகளின் போராட்டம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளது.
அதில்,”டெல்லியில் போராடும் விவசாயிகள் மற்றும் அரசு மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அமைதியாக கூடுவதற்கும், உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமைகள் இணையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாக்கப்பட வேண்டும். மனித உரிமைகளுக்கு உரிய மரியாதையுடன் சமமான தீர்வுகளைக் கண்டறிவது மிக முக்கியம்” எனக் குறிப்பிட்டுள்ளது.