சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான முலாயம் சிங் யாதவ் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம்சிங், உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி டெல்லி அருகே குருகிராமில் உள்ள மெடண்டா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த 2ஆம் தேதி அவர் அங்குள்ள தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். நேற்று அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதால் அவருக்கு உயிர் காக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் “உபி-ன் முன்னாள் முதல்வரும் , மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவு வருத்தம் அளிக்கிறது. இதர பிற்பட்டோர் வகுப்பினருக்காக பாடுபட்டவர். மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் முலாயம் சிங். அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு” என்று தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.