ஜாகிர் உசேன் மேற்கு வாங்க மாநிலத்தின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவர் நேற்று முர்ஷிதாபாத் அருகே உள்ள நிமிதா இரயில் நிலையத்தில் நடந்து சென்றார். அப்போது அமைச்சர் ஜாகிர் உசேன் மீது மர்ம நபரால் குண்டு வீசப்பட்டது. அதில் படுகாயமடைந்த அமைச்சர் அருகிலுள்ள முர்ஷிதாபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதனையடுத்து இச்சமபவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இரயில் நிலையத்தில் நடந்த சென்ற அமைச்சரின் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 25 பேர் காயமடைந்துள்ளதாகவும், அதில் 14 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் அமைச்சர் மீது குண்டு வீசப்பட்ட வழக்கை, மேற்கு வங்க அரசு சி.ஐ.டி க்கு மாற்றியுள்ளது. மேலும் இந்தக் குண்டு வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு 5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சமும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்தக் குண்டு வீச்சு சம்பவத்தில் காயமடைந்த அமைச்சர் ஜாகிர் உசேன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்குச் சென்று, அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, அமைச்சர் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் திட்டமிடப்பட்ட சதி எனத் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,” இது அமைச்சர் ஜாகிர் உசேன் மீது நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல். இது ஒரு சதிச்செயல். ஜாகிர் உசேனை தங்ளோடு இணையும்படி சிலர், கடந்த சில மாதங்களாக அழுத்தம் கொடுத்து வருகின்றனர். விசாரணை நடந்துகொண்டிருப்பதால், இதற்குமேல் எதையும் வெளியிட விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.