மெட்ரோவில் பயணம் செய்து கொண்டிருந்தபோது அருகில் சில கல்லூரி மாணவிகள் பேசியதை கேட்க நேர்ந்தது. அதில் ஒருவர், ” ஹேய் நான் புதுசா ஹேர்கட் பண்ண போறேன்..
அப்படியே கலரும் பண்ண போறேன்.. அடுத்த வருஷம் கல்யாணம் ஆயிருச்சுனா இதெல்லாம் பண்ணமுடியாது-ல நம்மள ஆண்டி-னு சொல்லிருவாங்கடி. கல்யாணத்துக்கு முன்னாடியே லைப்-அ என்ஜாய் பண்ணிரனும் என்று சொல்ல மெல்ல புன்னகைத்து கொண்டேன்..
தெரிந்த பையன் அவன். 27 வயது. எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு கல்யாணம் பண்ணிக்கிறேன் அக்கா. கொஞ்சமாவது லைப்-அ என்ஜாய் பண்ணனும். சீக்கிரம் கல்யாணம் பண்ணிட்டா மனைவி எல்லாத்துக்கும் ரூல்ஸ் போடுவா.. ப்ரெண்ட்ஸ் கூட இப்ப இருக்கிற மாதிரி ஜாலியா இருக்க முடியாது என்றான்.
இன்றைக்கு பல பேர் இப்படி சொல்வதை கேட்க முடிகிறது. திருமணம் என்பது responsiblity, கல்யாணம் ஆயிருச்சு-ல அப்புறம் என்ன வேண்டி கிடக்கு, கல்யாணம் ஆகி புள்ள பெத்த பிறகு இதெல்லாம் தேவையா, கல்யாணம் தான் ஆயிருச்சு-ல இனி புள்ளைங்களுக்காக வாழ வேண்டியது தான், என்ன பண்றியோ கல்யாணத்துக்கு முன்னாடி பண்ணிரு அப்புறம் பண்ண முடியாது.. இப்படி சொல்லி சொல்லி இன்றைக்கு பல பேர் திருமணம் என்றாலே பயமுறுத்தும் விஷயமாகிவிட்டது.
ஏன் இப்படி? முதல் காரணம் திருமணத்திற்கு பிறகு நான் உனக்காக மாறுகிறேன் அல்லது நீ எனக்காக மாற வேண்டும் என்ற நிர்பந்தம். சுய அடையாளத்தை தொலைக்கும் உறவுகளில் முதலில் பறிபோவது நிம்மதி..
அடுத்து அதான் கல்யாணம் ஆயிருச்சுல்ல எதுக்கு ப்ரெண்ட்ஸ் ஓட ஊர் சுத்தற என கேட்பதில் ஆரம்பித்து அதுவரை இருந்த Private Space ஐ தனதாக்க முயலும் யுக்தி. ( ஆண்/பெண் இருவருக்கும் பொருந்தும்).
குடும்ப முடிவெடுக்கும் அதிகாரங்களில் நான் சொல்வதை தான் நீ கேட்க வேண்டும் என்ற நினைப்பு. போதாக்குறைக்கு ஆரம்பத்திலேயே உன் புருஷன்/ பொண்டாட்டியை கைக்குள்ள வச்சிக்கலனா அவ / அவள் இஷ்டத்துக்கு ஆடுவா போன்ற சல்லித்தனமான அறிவுரைகள்.
சண்டைகளில் 2 குடும்ப உறவுகளையும் இருவரும் சராமாரியாக திட்டுதல். திருமணத்திற்காக உனக்காக நான் இதெல்லாம் தியாகம் பண்ணிருக்கேன் என இருவருக்கும் வரும் கருத்து மோதல்
நிதியை திட்டமிடுவது குறித்த குறைவான புரிதல்; ஆசைகளை, லட்சியங்களை, கனவுகளை திருமணம் என்ற பெயரில் நசுக்குவது
Late 30 களில் நடக்கும் திருமணங்களில் Self Individuality மற்றும் Financial Independance யால் ஏற்படும் சில பிரச்சனைகள்; என திருமண வாழ்வை பயமாக்கும் நிகழ்வுகளில் முக்கியமானவை இவை.இவற்றை சரியாக புரிந்து கொண்டால் கடப்பது மிக எளிது.
இவற்றையெல்லாம் தாண்டி திருமணம் என்பது நம் வாழ்க்கையை நம்மோடு சேர்ந்து வாழ வரும் ஒரு அழகான உறவு. நம் ரசனையை, நம் எண்ணத்தை, நம் பார்வையை, ஸ்பரிசத்தை பகிர்ந்து கொள்ளும் உறவு.
1000 ஆண்டுகள் ஆனாலும் ஆண்கள் பெண்கள் இருவரும் இருவரையும் புரிந்து கொள்ளவே முடியாது. இது படைப்பின் நியதி. ஆனால் இணைக்கு தகுந்தவாறு இருவரும் அனுசரித்து செல்ல துவங்கும் போது அங்கே தொடங்குகிறது ஆழமான பிணைப்பு. என்றைக்கு ஒரு உறவை இருக்கும் நிலையில் அப்படியே ஏற்றுக் கொண்டு இருவருக்குமான சுதந்திர வெளியில் இருப்பது சுகமானது.
அதுவும் சகிப்புத்தன்மை என்பது சில நேரங்களில் அடங்கிப்போவது. அதிலும் யார் அடங்கி போவது எனற கேள்விக்கு உங்களுக்கு விடை தெரியுமானால் வாழ்வில் என்றுமே வசந்தம் தான்.
குழந்தை வளர்ப்பு, பொருளாதாரம், குடும்ப வாழ்வு என்பதையெல்லாம் கடந்து வாழ்வின் 50 வது வயதில் இருவரும் கரம் பிடித்து நினைவுகளை பகிர்ந்து, வாய்விட்டு சிரித்து, பிடித்தவற்றை சாப்பிட்டு மகிழ நம் துணை இருப்பது பெருமகிழ்வு.
திருமணம் என்ற பெயரில் நடக்கும் உழைப்பு சுரண்டல்,வரதட்சணை கொடுமை, அடிமையாக நடத்துதல், குடும்ப வன்முறை , ஏமாற்றி திருமணம் செய்வது இதெல்லாம் கட்டாயம் எதிர்க்கப்பட வேண்டியது. எதுவும் எல்லை மீறும் போது அந்த உறவில் இருந்து வெளிவருவதுதான் சரியும் கூட.
நம் குழந்தைகளுக்கு படிப்பு சொல்லித்தரும் போதே வாழ்க்கை கல்வியையும் சேர்த்து கற்றுக் கொடுப்போம். ஒரு நல்ல சமூகத்திற்கு சிறந்த குழந்தைகளை கொடுப்பது அவசியம். அது நம் கையில் தான் இருக்கிறது.
-செய்தி ஆசிரியர் ஹேமா ராகேஷ்