சென்னை தினத்தையொட்டி பிரமாண்டமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 22ஆம் தேதி சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் சென்னை மாநகராட்சியின் சார்பில் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் இந்திய தொழில் கூட்டமைப்புடன் இணைந்து “சென்னை தினத்தை” பெசன்ட் நகர், எலியட்ஸ் சாலையில் மாலை 3:30 மணி முதல் இரவு 11:30 மணி வரை பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட உள்ளது. மேலும் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிக்கொணரும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் போன்றவையும், உணவு மற்றும் சிற்றுண்டி விற்பனை கடைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தடுப்பூசி முகாம்கள் மற்றும் இயற்கை உர விற்பனைக்கான கடைகளும் அமைக்கப்பட உள்ளன. மேலும் பொதுமக்கள் தங்கள் கைபேசிகளில் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் வகையில் சென்னையில் உள்ள முக்கிய பூங்காக்களில் “செல்ஃபி பூத்”கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி சென்னையில் பல இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணியும் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தத் தினத்தை கொண்டாட “நம்ம சென்னை, நம்ம பெருமை” என்ற உணர்வுடன் பொதுமக்கள் அனைவரும் ஆகஸ்ட் 20 மற்றும் 21 ஆகிய நாட்களில் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரை சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் நடைபெறும் சென்னை தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிபவிக்கப்பட்டுள்ளது.