பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி (58) இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, முதலமைச்சர் பதவியை அமரிந்தர் சிங் திடீரென ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, புதிய முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பணிகள் தீவிரமடைந்தன.
இதையடுத்து, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சண்டீகரில் உள்ள ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் இறுதியில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக சரண்ஜித் சிங் சன்னி தோ்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவர் அமரீந்தர் சிங் மந்திரிசபையில் தொழிற்கல்வித்துறை மந்திரியாக பதவி வகித்தவர் ஆவார்.
இன்று காலை 11 மணியளவில் கவர்னர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத்தின் 16வது முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இதன்மூலம், பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் இன முதல்வர் என்ற சிறப்பை சரண்ஜித் சிங் சன்னி பெற்றுள்ளார் . இவர் விவசாயிகளின் தண்ணீர் வரி மற்றும் மின்சாரக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார். சா.கற்பகவிக்னேஷ்வரன்