தமிழக எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி உள்ள நிலையில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை எதிர்க்கட்சி தலைவர் என குறிப்பிட்டு திருப்பத்தூரில் கல்வெட்டு அமைத்திருக்கும் விவகாரம் அதிமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்து பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, நவம்பர் 24ஆம் தேதியன்று திருப்பூருக்கு வந்த ஜே.பி.நட்டா அங்கிருந்து திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாஜக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்தார்.
அப்படி திறந்து வைக்கப்பட்ட திருப்பத்தூர் மற்றும் திருப்பூர், பாஜக மாவட்ட அலுவலகங்களில் வைக்கப்பட்ட கல்வெட்டில் நயினார் நாகேந்திரன் பெயருக்கு கீழ் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என பொறிக்கப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் ஆதிமுக-வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ள நிலையில், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை எதிர்க்கட்சி தலைவர் என குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட தலைவர்களிடம் தெரிவித்திருப்பதாகவும் ‘விரைவில் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன்’ என்று மாற்றப்படும் என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
இதனிடையே நயினார் நாகேந்திரன் முன்னாள் அதிமுக உறுப்பினர் என்பதும், அதிமுகவின் முக்கிய குழுவான வழிகாட்டுதல் குழுவை சேர்ந்த மாணிக்கம் அண்மையில் பாஜகவில் இணைந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.