புதுடில்லி:-
டெல்லியிலிருந்து சொந்த மாநிலம் திரும்பிய 20 வெளிமாநிலத் தொழிலாளர்களை, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் சந்தித்தார். சாலையோரங்களில் அமர்ந்து, அவர்களிடம் நலம் விசாரித்தார்.
நேற்று நடந்த சுயசார்பு பாரத திட்டத்தின் 5-வது கட்ட அறிவிப்பு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, இது குறித்த கேள்விக்கு, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-
சாலையில் அமர்ந்து பேசி, அவர்களுடைய நேரத்தை வீணடித்துள்ளார் ராகுல். அதற்கு பதிலாக, அவர்களுடைய சூட்கேஸ்களை/குழந்தைகளை சுமந்து சென்று உதவியிருக்கலாம். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு, தேவையான உதவி செய்ய, அந்த மாநில அரசுகளை, அவர் கேட்டுக் கொள்ளலாம். இது வெறும் அரசியல் நாடகம் தான்.
இந்த இக்கட்டான நேரத்தில், இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடுவதைவிட்டு, பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ் தலைவர், சோனியாவிடம் இதை கோரிக்கையாக வைக்கிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.