இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 4வது டி20 போட்டியில் இந்திய அணி மீண்டும் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
வெல்லிங்டனில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, ஜடேஜா, முகமது சமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு சஞ்சு சாம்சன், சைனி,வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
அதேபோல் நியூசிலாந்து அணியில் கேப்டன் கனே வில்லியம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு டிம் சௌதி அணியை வழிநடத்தினார்.
இதனை தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் கேஎல் ராகுல் (39 ரன்கள்) மற்றும் மணிஷ் பாண்டே(50 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 165 ரன்களை எடுத்தது.
நியூசிலாந்து அணி தரப்பில் சௌதி 3 விக்கெட்டுகளையும், பன்னெட் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் முன்ரோ 64 ரன்களும், டிம் செய்ஃபர்ட் 57 ரன்களும் எடுக்க அந்த அணியும் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுக்க ஆட்டம் சமனில் முடிந்தது.
இதனை தொடர்ந்து கடந்த போட்டியை போலவே வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சூப்பர் ஓவர் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஒரு ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 13 ரன்கள் எடுத்தது.
ஒரு ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணியில் கேஎல் ராகுல் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
5 பந்துகளை சந்தித்த இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகிக்கிறது.
அதே சமயம் இந்த முறையும் நியூசிலாந்து அணிக்கு சூப்பர் ஓவர் ராசியில்லாத ஒன்றாகவே அமைந்தது.