13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 17-ம் தேதி தென்ஆப்பிரிக்காவில் தொடங்கியது.
மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகள் முடிவில் ஆசிய அணிகளான நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில், போட்செப்ஸ்ட்ரூமில் இன்று இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. இதில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோத உள்ளன. நடப்பு தொடரில் இவ்விரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இந்த நிலையை எட்டியுள்ளன.
பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் வலுமிக்கதாக விளங்கும் பிரியம் கார்க் தலைமையிலான இந்தியாவுக்கே கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. அரைஇறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது இந்தியாவின் நம்பிக்கைக்கு தீனி போட்டுள்ளது.
உலக கோப்பை போட்டி ஒன்றில் வங்காளதேச அணி இறுதிசுற்றை எட்டியிருப்பது இதுவே முதல் முறையாகும். எனவே வெற்றி கண்டால், அது வங்காளதேச அணிக்கு சரித்திர சாதனையாகும்.