முதல் முறையாக 6 மொழிகளில் ஐபிஎல் ஏலம் வர்ணனை
2020ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரில் நடைபெறுவது வழக்கம். ஆனால் பிசிசிஐ-யின் புதிய தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பின்னர் முதல்முறையாக ஐபிஎல் ஏலம் கொல்கத்தாவுக்கு மாற்றப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 19ம் தேதி நடைபெறும் இந்த ஏலத்தின் நேரமும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எப்போதும் காலை தொடங்கும் ஏலம் இம்முறை மதியம் 2.30 மணிக்கு ஆரம்பமாகிறது. இதன் மூலம் இந்த ஏலத்தை ஏராளமானோர் காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதுவரை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெற்ற ஐபிஎல் ஏலம் முதல்முறையாக தமிழ், கன்னடம்,தெலுங்கு, வங்காளம்,ஆகிய பிராந்திய மொழிகளிலும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
8 அணிகளில் சேர்த்து மொத்தம் 73 இடங்கள் உள்ளன. இவற்றில் அதிகப்பட்சமாக 29 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெறுவார்கள். அதிகப்பட்சமாக பெங்களூர் அணி 12 வீரர்களையும், கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் 11 வீரர்களையும் ஏலம் எடுக்கும். இந்த ஏலத்துக்காக 971 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 332 வீரர்கள் மட்டுமே ஏலம் இடப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. .