கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறார் வதையில் ஈடுபட்டதாக கடந்த இரண்டு நாள்களில் இரண்டு பேர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குமாரபுரம் பகுதியை சேர்ந்தவர் ரத்தின சிவா. கட்டட தொழிலாளியான இவர் அந்தப் பகுதியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. ரத்தின சிவா தொடர்ந்து பல நாள்கள் மாணவிக்கு தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரின் பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்தப் புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி ரத்தின சிவாவை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மயிலாடியைச் சேர்ந்த குருசாமி, அரசு போக்குவரத்துக் கழகத்தில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது வீட்டில் வாடகைக்கு இருக்கும் தம்பதியின் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமி தன் பெற்றோரிடம் அழுதபடியே கூற, அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, குருசாமியை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸார் கைது செய்தனர். இத்தகைய சம்பவங்கள் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.