மாதவிடாய் காலங்களில் பெண்களின் இன்றியமையாத துணையாக விளங்குவது நாப்கின்கள். இதன் பாதிப்பினால், பெண்கள் சில நோய்களுக்கு ஆளாகின்றனர்.இதனால் பெண்கள் மனஉளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.
பெரும்பாலான நாப்கின்கள் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் நாப்கின் தாயாரிப்பில் டயாக்சினும், ஈரத்தை உறிஞ்சுவதற்காக ரசாயனமும் சேர்க்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்நிலையில் திருச்சி ஜோசப் அரசு உதவிபெறும் கல்லூரியின் தாவரவியல் துறை மூன்றாமாண்டு மாணவர்கள் ஆய்வில் மலைவாழ் பெண்கள் மாதவிடாய் காலங்களில் சீமை கற்றாழை செடிகளின் நார்களை துணியுடன் இணைத்து பயன்படுத்தி வந்தது தெரிய, அது கற்றாழை நார் நாப்கின்களின் கண்டுபிடிப்புக்கு வழிவகுத்துள்ளது.
சீமை கற்றாழையில் இருந்து நார்கள் பிரித்தெடுக்கப்பட்டு, அவை ஹைட்ராக்சைடு திரவத்தில் நனைக்கப்படுகின்றன. பின் நார்களை முறைப்படி அடுக்கி நாப்கின் தயாரிக்கப்படுகிறது.
இந்த நாப்கின்கள் அல்ட்ரா வயலட் புற ஊதா கதிர்களின் உதவியுடன் சுகாதார முறையில் தயாரிக்கப்படுவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
சீமைக் கற்றாழை நாப்கின்கள் நச்சு எதிர்ப்புத் தன்மை கொண்டவை என்பதால் நோய்க்கிருமிகளை அழிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சாதாரண நாப்கின்கள் 7 மில்லி மட்டுமே உறிஞ்சும் தன்மை கொண்டவை. சீமை கற்றாழை நாப்கின்கள் 13 மில்லி வரை உறிஞ்சும் தன்மை கொண்டவை. இயற்கை வகை கற்றாழை நாப்கின்களின் எளிதில் மட்கும் தன்மை கொண்டது.
கற்றாழை நாப்கின் இயந்திரத்தின் விலை 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்பதால் பெண்களின் சுய தொழிலுக்கு கைகொடுக்கும்.
கற்றாழை வகை நாப்கின்கள் 2 ரூபாய்க்கு விற்பனை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
நாப்கினை பற்றிய விழிப்பு உணர்வு என்பது அதைப் பயன்படுத்துவதைப் போலவே, அதை அப்புறப்படுத்துவதிலும் இருக்க வேண்டும்.