தமிழ்நாடு மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடும் விதமாக அரசு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட 21 வகையான பொருட்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்க உத்தரவிட்ட நிலையில், கரும்பு விடுபட்டிருந்ததை அடுத்து, கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு சேர்த்து வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொரானா தாக்கம் தமிழகத்தில் அதிகமாக இருந்ததை கருத்தில் கொண்டு பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட 2500 ரூபாய் வழங்கப்பட்டது. ஜனவரி 3ம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ள நிலையில், பரிசுத்தொகையும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் நிலவுகிறது.
இந்நிலையில் திமுக 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சி ஏற்ற பிறகு வரும் முதல் பொங்கல் என்பதால் மக்களின் எதிர்பார்ப்பை ஏமாற்றமாக்க வேண்டாம் என அரசு நினைக்கிறதாம். எனவே பொங்கல் பரிசு தொகுப்பு உடன், பொங்கல் பரிசுத் தொகையாக குறைந்தபட்சம் 1000 ரூபாயாவது வழங்க முடியுமா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.