சென்னை:-
இனி ஒரே ரேஷன் கடையில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிய முடியாது என்று கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் மோசடிகள் நடைபெறாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்துவருகிறது. அதன் ஒருபடியாக, தமிழக ரேஷன் கடைகளில் இம்மாதம் முதல் தேதியில் இருந்து மீண்டும் பயோமேட்ரிக் மூலம் அடையாளம் சரி பார்த்த பிறகு ரேஷன் பொருட்களைத் தரும் நடைமுறை தொடங்கிவிட்டது.
அதேபோல, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இணையவழியில் புகாரளிப்பதில் சிரமம் உள்ளதாக மக்கள் புகார் அளித்துள்ளதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ரேஷன் கடைகளில் சம்பந்தப்பட்ட பணியாளர்களைத் தவிர வெளி நபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை எச்சரித்துள்ளது.
வெளியாட்களை அனுமதிக்க துணைபோகும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது கூட்டுறவுத்துறை அறிக்கையில் என தெரிவிக்கப்பட்டுள்ளது.