அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது, அவரது மனைவி டெல்லியில் உள்ள அரசு பள்ளிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் அமெரிக்க அதிபர் டிரம்ப் – மெலனியா தம்பதியினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். ட்ரம்புக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கும் பொருட்டு அவர் கலந்து கொள்ளும் இடங்கள் முழு வீச்சில் தயாராகின்றன.
மேலும் ட்ரம்ப் டெல்லி, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து அகமதாபாத்தில் இருந்து 22 கிலோ மீட்டர் தூரம் சாலை வழியாக அவர் பயணம் செய்ய உள்ளதால் ஆங்காங்கே கண்கவர் நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப், இந்த சுற்றுப்பயணத்தின் தெற்கு டெல்லியில் உள்ள ஏதேனும் ஒரு அரசுப் பள்ளிக்கு சென்று பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
அங்கு சில மணி நேரங்கள் செலவிடும் மெலனியா ட்ரம்ப், அங்கு பயிலும் பள்ளி குழந்தைகளுடன் உரையாடவும் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டெல்லி வரும் மெலனியா டிரம்பை, அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜரிவால், துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா ஆகியோர் வரவேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.