ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பெருகி வரும் ஊழலை அளிக்க வேண்டும், போக்குவரத்து காவல் துறையினால் ஓட்டுனர்களுக்கு ஏற்படும் இழப்பு என பல கோரிக்கைகள் அடங்கிய மனு தென்னிந்திய வாகன ஓட்டுநர் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள அனைத்து வாகன ஓட்டுனர்கள் அதை சார்ந்த தொழிலாளர்கள் சுமார் ஒரு கோடிக்கும் மேல் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். 2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வருவாய் இழப்பு கடன் தொல்லை காரணமாக சுமார் 80 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் தற்கொலை செய்துள்ளார்கள்.
அதேபோல் இந்த ஆண்டும் கொரோனா பாதிப்பால் அரசுக்கு ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய இன்சூரன்ஸ் சாலை வரி செலுத்த வருவாய் இல்லாமல் வாடுகிறார்கள். அன்றாட குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். ஆகவே, அனைத்து வரிகளையும் ரத்து செய்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்.
பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் போது சரக்கு வாகன போக்குவரத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள போதிலும் சென்னை மற்றும் பல மாவட்டங்களில் சரக்கு வாகனங்களை தடுத்து ஓட்டுனர்களை தாக்கி சரக்குகளை அபகரித்து மாமூல் கேட்டு அடாவடி செய்து வரும் போக்குவரத்து காவல் துறையினரை வன்மையாக கண்டிக்கிறோம்.
விலைவாசி உயர்வுக்கு காரணமான பெட்ரோல் டீசல்,கேஸ், போன்றவற்றை ஜிஎஸ்டி வரியின் பிரிவில் சேர்க்க மத்திய மாநில அரசு முன்வர வேண்டும். ஆர்டிஓ அலுவலகங்களில் பெருகிவரும் ஊழலைத் தடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.