தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு முதல் கொரோனா மரணம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த எந்தவித இணைநோயும் இல்லாத இளம்பெண் ஒருவர் தஞ்சாவூரில் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 332 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 476 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 221 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று 221 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த எந்தவித இணைநோயும் இல்லாத 18 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான மருத்துவ காரணம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.