நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அரூர் பகுதியில் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், அரூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சங்கம் இணைந்து, அரூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட பேரூராட்சிகள் துணை இயக்குநர் கண்ணன் கலந்து கொண்டு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்களுக்கு கபசுர கசாயம், முகக்கவசம், கையுறை, வழங்கினார். தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கைகளை பேருந்து நிலையத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒட்டினார்.