மதுரை:-
மதுரையில் பிறந்து 4 நாள்களே ஆன பெண் சிசுவை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே உள்ள சோழவந்தானை சேர்ந்த தவமணி-சித்ரா தம்பதிக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4வது பெண் குழந்தையை பெற்றெடுத்தார் சித்ரா. ஆனால் ஐந்தாம் நாள் காலையில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் இறந்தது என கூறி அருகில் உள்ள பழைய காவலர் குடியிருப்பு பின்னாலுள்ள கருவேல மரம் அருகே புதைத்தனர்.
இது குறித்து சோழவந்தான் கிராம நிர்வாக அலுவலர் (VAO) சமையன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசு புதைத்த இடத்தை ஆய்வு செய்து சிசுவின் தந்தை தவமணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
குழந்தைக்கு சளிபிடித்து, தொடர்ந்து வாந்தியெடுத்து உடல்நிலை சரியில்லாமல்தான் இறந்தது என்று கூறினார்கள். இந்நிலையில் 16ம்தேதி வாடிப்பட்டி வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், டி.எஸ்.பி ஆனந்த் ஆரோக்கியராஜ் முன்னிலையில் மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியர் சதாசிவம் மற்றும் மருத்துவ குழுவினர் சிசுவின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனர். பின்னர் மயானத்திற்கு சென்று குழந்தையை நல்லடக்கம் செய்தனர்.
இதை தொடர்ந்து தவமணியின் குடும்பத்தாரை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தவமணியும், அவரது தாய் பாண்டியம்மாளும் இணைந்து பெண் சிசுவை எருக்கம்பால் கொடுத்து கொலை செய்ததாக ஒப்பு கொண்டனர்.
அவர்கள் வாக்குமூலத்தில் கூறியதாவது :-
சம்பவத்தன்று சிசுவின் தாய் சித்ரா மற்ற குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். மருமகள் சென்ற பின் சிசுவின் பாட்டி பாண்டியம்மாள் ஏற்கனவே தயாராக எடுத்து வைத்திருந்த எருக்கம்பாலை தனது மகன் தவமணியுடன் சேர்ந்து சிசுவின் வாயில் ஊற்றி மூச்சு திணற வைத்து கொன்றதாகவும், தொடர்ந்து சிசுவின் காலை பிடித்து தரையில் அடித்தோம் இதில் தலையில் காயம் பட்டது. பின்னர் அருகில் உள்ள பழைய காவலர் குடியிருப்பு பின்னால் உள்ள கருவேலம் மர புதருக்குள் குழி தோண்டி புதைத்தோம் என்றுவாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் (சிசுவின் தந்தை) தவமணி (35) அவரது தாய் பாண்டியம்மாள் (60) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது IPC 301, 201 ஆகிய பிரிவுகளின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்தனர்.
தமிழகத்தில் முற்றிலுமாக ஒழிந்து விட்டது என்று எண்ணிய பெண் சிசுக்கொலை மீண்டும் தென்மாவட்டங்களில் தலையைத் தூக்கி இருப்பது சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.