தமிழகத்தில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். அந்தவகையில் சென்னை மக்களின் கோரிக்கைகளை ஏற்று மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட்டதாக முதலவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக அரசு புதிய கட்டண விவரங்களையும் வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மெட்ரோ ரயிலில் 2 கிலோ மீட்டர் வரையிலான பயணத் தொலைவுக்கு கட்டணம் மாற்றமின்றி 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டில் இருந்து 5 கிலோ மீட்டர் வரையிலான தொலைவுக்கு 20 ரூபாயும், 5 முதல் 12 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான பயணத்துக்கு 30 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 12 முதல் 21 கிலோ மீட்டர் வரை செல்ல 40 ரூபாயும், 21ல் இருந்து 32 கிலோ மீட்டர் வரை பயணிப்போருக்கு 50 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம், சென்னை மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணம் 70 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புதிய கட்டண நடைமுறை வரும் திங்கட்கிழமை அன்று அமலுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.