ரோல்ஸ் ராய்ஸ் கார் வரிவிலக்கு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற நடிகர் விஜய்யின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரி நடிகர் விஜய் தாக்கல் செய்த வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
இதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்திருந்தார். அபராதம் விதித்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் அளித்த தீர்ப்பின் நகல் இல்லாததால் விஜய்யின் மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை.
இந்நிலையில் தனி நீதிபதியின் தீர்ப்பின் நகல் இல்லாமல் வழக்கை பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிடக்கோரி விஜய் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு இன்று நீதிபதிகள் எம். துரைசாமி, ஆர். ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேலும் தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.