தமிழக அரசு விரைவில் பொது விநியோக அமைப்பு மூலம் தரமான அரிசியை வழங்கும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சட்டசபையில் தெரிவித்தார்.
ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசியின் தரமற்றதாக இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது இதை காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜேஷ்குமார், ஆளும்கட்சியின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அரிசியின் தரம் மிக மோசமாக இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, தமிழகத்தில் 2 கோடியே 13 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் இருக்கின்றன. முன்னுரிமை பெற்ற குடும்ப அட்டைகளை வசதியுடையவர்கள் பெற்றிருப்பதும் வசதி இல்லாதோர் முன்னுரிமை அற்ற குடும்ப அட்டைகளை பெற்றிருப்பதும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை தரமானதாக வழங்க தமிழக அரசு உறுதி ஏற்றிருப்பதாகவும் ரேஷன் கடைகளுக்கு அரிசி விநியோகம் செய்யும் ஆலைகளுக்கு கலர் ஷேடிங் என்ற இயந்திரத்தை நிறுவ உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் விரைவில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.