ஊட்டி:-
நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாவிட்டால், சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடியாக அறிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 513ஆக அதிகரித்துள்ள நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் முறையான அனுமதியின்றி திருமணம் உள்ளிட்ட தனிநபர் நிகழ்ச்சிகளை நடத்தினால், ஓராண்டு சிறை தண்டனை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆணையர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டம் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் தொற்றுநோய் சட்டம், 1897-ன் கீழ் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத தனி நபர்கள், நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொது இடங்களில் நோயைப் பரப்பும் வகையில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினாலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.