நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காற்றில் கரைந்த நா.முத்துக்குமாரின் 45-வது பிறந்த நாள் இன்று!
இந்நிலையில் நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் தனது தந்தை குறித்து கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
என் தந்தை
என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்.
அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்
என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்
அவர் எங்கள் காட்டில் சிங்கம்
என் தந்தையின் வரிகள் முத்து
அவர்தான் எங்களின் சொத்து
என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்
அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்
என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா
எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா
எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா
இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா
– ஆதவன் முத்துக்குமார்.
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் வரிசையில் தனித்தடம் பதித்தவர் நா.முத்துக்குமார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரம் கிராமத்தில் பிறந்த நா.முத்துக்குமார். இயற்பியல் மாணவரான இவர் தமிழ் மீதான காதலால் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலை பயின்றார். யாப்பிலக்கணத்தை முறையாக பயின்றவர். அதே சமயம் பாமரனுக்கும் சரியாய் புரியும் வகையில் கவிதைகள், பாடல்களை இயற்றியவர்.
பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றிய முத்துக்குமார் சீமான் இயக்கிய ‘வீரநடை’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஆனார்.
தமிழ் சினிமாவில் 92க்கும் மேற்பட்ட படங்களில் 1500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ‘தங்கமீன்கள்’ படத்தில் இவர் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’, ‘சைவம்’ படத்தில் எழுதிய ‘அழகே அழகே’ ஆகிய பாடலுக்காக தேசிய விருதுகள் பெற்றார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கட்டிருந்த அவர், 2016-ம் ஆண்டு 41-வது வயதில் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி உயிரிழந்தார். அவருக்கு ஜீவலட்சுமி என்ற மனைவியும், ஆதவன் என்ற மகனும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.